பதிவு செய்த நாள்
01
டிச
2015
11:12
உடுமலை: தொன்மை வாய்ந்த, கண்டியம்மன் கோவிலை புனரமைக்க, தொல்லியல் துறையின் தொழில்நுட்ப கருத்துரு பெற்று நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். உடுமலை சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. உப்பாறு படுகை வரலாற்றின் ஆவணமாக காணப்படும் இந்த கோவில், போதிய பராமரிப்பில்லாமல், பொலிவிழந்து வருகிறது. இருகருவறை; ஒரே தெய்வம் என பல்வேறு சிறப்புகளை பெற்ற கோவிலின் முன்மண்டபம், கோபுரம், மேற்கூரை பழுது, கொடி மரத்தில் விரிசல், தரைதளம் சிதிலம் உட்பட கோவிலில் தற்போது பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.
எனவே, கோவிலை முழுவதுமாக புனரமைக்க வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கை,‘தினமலர்’ நாளிதழில் செய்தியாக வெளியானது. இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறியதாவது: சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவிலின் தொகுப்பு கோவிலாகும். தொன்மையான இக்கோவிலை புனரமைக்க, துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகளை, 14 வது நிதி ஆணைய நிதி ஒதுக்கீட்டில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதால், விதிமுறைகளின்படி, தொல்லியல் துறையின் தொழில்நுட்ப கருத்துரு பெற்ற பிறகே, துறை சார்பில், மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும். தொல்லியல் வல்லுனர்கள், கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, தொன்மை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான தொழில்நுட்ப கருத்துரு தேவையுள்ளதால், தொல்லியல் துறை சார்பில், நிபுணர், இவ்வாரத்தில், மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அறிக்கை அடிப்படையில், கல்கட்டுமானமாக உள்ள கோவில், முழுவதுமாக பிரித்தெடுக்கப்பட்டு, விரிவான முறையில், முழுமையாக திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் மகிழ்ச்சி: நுாற்றாண்டுகளை கடந்த, கண்டியம்மன் கோவிலை புனரமைக்க, நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்து அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவில் சுவர், முன்மண்டப துாண் மற்றும் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் சிதிலமடையாமல், தொல்லியல் துறை வழிகாட்டுதல்படி, புதுப்பிக்கப்பட உள்ளதால், வரலாற்று ஆய்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.