பதிவு செய்த நாள்
10
டிச
2015
11:12
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, வரும், 16ம் தேதி துவங்குகிறது. மேற்றலை தஞ்சாவூர் என்றழைக்கப்படும், அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமையானது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா வரும், 16ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 10:30 மணிக்கு கிராம தேவதை வழிபாடும், இரவு கிராம சாந்தியும் நடக்கிறது. 17ம் தேதி அதிகாலையில் கணபதி வேள்வியும், காலை 7:45 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. பின், தேரோடும் வீதி வழியாக சுவாமி புறப்பாடு நடக்கிறது. மாலையில் யாகசாலை பூஜை துவங்குகிறது. வரும், 18ம் தேதி காலை சூரிய வாகனத்திலும், மாலையில் சந்திர வாகனத்திலும் சுவாமி உலா நடக்கிறது. 19ம் தேதி மாலை பூத வாகனத்திலும், 20ம் தேதி மாலை புஷ்ப பல்லக்கிலும், திருவீதியுலா நடக்கிறது. 21ம் தேதி மாலை பஞ்ச மூர்த்திகள் உலா நடக்கிறது. சுவாமி திருக்கல்யாண உற்சவம் 22ம் தேதி காலையில் நடக்கிறது. 23ம் தேதி காலை 7:30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 10:15 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்ககேஸ்வர சாமிகள் உள்ளிட்ட மடாதிபதிகள் அருளுரை வழங்குகின்றனர். அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் வடம்பிடித்து துவக்கி வைக்கின்றனர். தேர்த்திருவிழா ஏற்பாடுகளை, திருமுருகன் அருள்நெறிக் கழகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.