பதிவு செய்த நாள்
03
ஆக
2011
11:08
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோஷத்துடன் வடம் இழுத்தனர். புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா, கடந்த ஜூலை 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு பதினாறு வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா நடந்தது. 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும், அம்பாள், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஜூலை 29 ல் மங்களாசாசனமும், அன்று இரவு ஐந்து கருட சேவையும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அதிகாலை நான்கு மணிக்கு ஏகாந்த திருமஞ்சனம், அதன்பின் அம்பாள், சுவாமி தேரில் எழுந்தருளல் நடந்தது. காலை 8.30 மணிக்கு தேரோட்டம் துவங்க, நான்கு ரதவீதிகளில் வலம் வந்த தேர், பகல் 12.30 க்கு நிலைக்கு வந்தது. "கோவிந்தா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் அம்பாள், சுவாமியை தரிசித்தனர்.