அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2015 06:12
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இங்கு ராவணன் மகன் மேகநாதன், பஞ்சபாண்டவர்கள் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.
அமாவாசை தோறும் இந்த கோயிலில் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. ஆசைகளை விட்டு இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகள் கிட்டும். கார்த்திகை மாத அமாவாசையான காலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாள் கோயிலின் முன் மண்டபத்தில் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றன. மதியம் 1 மணிக்கு 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத தண்டபானி சிவாச்சாரியார் யாக குண்டத்தில் மிளகாய்வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். இதில் தஞ்சை மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.யாகத்திற்கான ஏற்பாட்டை சங்கர் குருக்கள் செய்திருந்தார். அமாவாசையை முன்னிட்டு கும்பகோணத்தில் இருந்து அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. நாச்சியார்கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.