பதிவு செய்த நாள்
23
டிச
2015
10:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களில், நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியும், நேற்று துவாதசியும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பவுர்ணமிக்கு முன்பாக வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த நாளான அன்று, பக்தர்கள் இரவு முழுக்க உறங்காமலும், உண்ணாமலும் விரதமிருந்து, அதிகாலையில் கோவிலில் சென்று பெருமாளை தரிசிப்பர். அப்போது, கோவிலின் வடக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பரமபத வாசலில் பெருமாள் பிரவேசிப்பதை காண்பது, புண்ணியமாக கருதப்படுகிறது. ஆனைமலை பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலில், கடந்த 20ம் தேதி மாலை 4:00 மணிக்கு, பெருமாளுக்கு 18 வகை அபிேஷகம், 10 வகை மலர்களால் அலங்காரம், 36 வகை காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. நேற்று துவாதசியை முன்னிட்டு, சிறப்பு பஜனைகள் இடம் பெற்றன. பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி வரதராஜபெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, பல்வேறு அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, தேவியர் சகிதம் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். துவாதசியான நேற்றும், பக்தர்கள் விரதமிருந்து வந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.