பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று காலை, ஆருத்ரா திருவிழா சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. இன்று(டிச.26ல்) அதிகாலை, 5:00 மணிக்கு, கோபுர தரிசனம் நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலில், மூன்று நாட்கள் நடைபெறும் ஆருத்ரா விழா நேற்று துவங்கியது.அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு தனுர்மாத அலங்காரம், சிறப்பு பூஜையும், காலை, 7:30 மணிக்கு, காலசந்தி பூஜையும் நடந்தன. காலை 9:00 மணிக்கு, உற்சவர்கள் சோமாஸ்கந்தர், வண்டார் குழலியம்மன், விநாயகர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு சுவாமிகளும், சிறப்பு அலங்காரத்தில், பழையனுார், திருவாலங்காடு ஆகிய கிராமங்களில் உள்ள, மூன்று வீதிகளில் உலா வந்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து, பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
மதியம், 1:00 மணிக்கு, மேற்கண்ட நான்கு சுவாமிகள் கோவில் வளாகத்திற்கு திரும்பி வந்தனர். பின், கோவில் குருக்கள் திருவெம்பாவை பாட, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு உற்சவர் நடராஜ பெருமான், கோவில் பின்புறத்தில் உள்ள விருட்சம் ஆலமரத்தின் கீழ் மேடையில் வந்து எழுந்தருளினார். பின், 33 வகையான அபிஷேகங்கள், இன்று அதிகாலை, 4:00 மணி வரை, தொடர்ந்து நடந்தன. இன்று காலை, 5:00 மணிக்கு உற்சவர் நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கோபுரத்தின் முன் எழுந்தருளி, கோபுர தரிசனம் நடைபெற்றது. காலை, 9:00 மணிக்கு உற்சவர் டராஜப் பெருமான் பழையனுார், திருவாலங்காடு முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அபிஷேகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.