பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
திருச்சி: பண்டிகை விடுமுறையால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 21ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை அடுத்து, ராப்பத்து உற்சவம் துவங்கியது. இன்று பகல், 1:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பரமபத வாசல் திறந்து இருக்கும். 28ம் தேதி வேடுபறி நிகழ்ச்சி நடப்பதால் பரமபதவாசல் திறக்கப்படாது. தொடர் விடுமுறை காரணமாக, கடந்த இரு நாட்களாக, வெளி மாநிலம், மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளன.தவிர, சபரிமலை, மேல் மருவத்துார் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், கூட்டம் கூட்டமாக, ஸ்ரீரங்கம் கோவில் தரிசனத்துக்கு வருகின்றனர். சிறப்பு தரிசனம், 100 ரூபாய், 250 ரூபாய் கட்டண டிக்கெட்டில் வருபவர்கள், மூன்று மணி நேரத்திற்கு பின் தரிசனம் மேற்கொள்ள முடிகிறது. பொது தரிசனத்தில் மூலஸ்தான சேவை, பரமபத வாசல் சேவை என, இரண்டாக பிரித்துள்ளனர். காலை, 8:00 மணிக்கு, ரங்கா ரங்கா கோபுரம் வெளிப்புறத்தில் இருந்து செல்லும் பக்தர்கள், ஆரியபடாள் வாசல் பகுதியில் தடுக்கப்பட்டு, மதியம், 1:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்ட பின், உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர். இவர்கள், 5:00 மணி நேரத்திற்கு பின் தரிசனம் செய்தனர்.