சபரிமலையில் தங்க அங்கி இன்று வருகை: நாளை மண்டலபூஜை: பக்தர் கூட்டம் நீடிக்கிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2015 12:12
சபரிமலை:சபரிமலையில் நாளை மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வருகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டலகாலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற பூஜைகளின் நிறைவாக நாளை மதியம் மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மண்டலபூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள், தங்க அங்கி காணிக்கையாக வழங்கினார். இந்த அங்கி கடந்த 23-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்டது.இந்த பவனி இன்று மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடைகிறது. அதன் பின்னர் பம்பை கணபதிகோயில் அருகே பக்தர்கள் தரிசனத்துக்காக அங்கி வைக்கப்படும்.
மாலை மூன்று மணிக்கு பெட்டகத்தில் அங்கி வைக்கப்பட்டு ஐயப்பா சேவாசங்க தொண்டர்கள் மூலம் தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர். 6.20 மணிக்கு 18-ம் படி வழியாக சன்னிதானம் வரும் அங்கியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் வாங்கி நடை அடைத்து, ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிப்பர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெறும். நாளை காலை 3.15 மணிக்கு துவங்கும் நெய்யபிஷேகம் 9.45மணிக்கு நிறைவு பெறும். 11.02 முதல் 11.39 மணிக்குள் உள்ள கும்பராசி முகூர்த்தத்தில் மண்டலபூஜை நடைபெறும். நாளை இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர், பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்படும். அதன் பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை திறக்கும்.கூட்டம் நீடிப்பு: கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நிலக்கல்லில் அடிக்கடி வாகனங்கள் தடுக்கப்படுகிறது. பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சன்னிதானத்தில் உள்ள நிலைமைக்கேற்ப அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் தங்க அங்கி வருகைக்காக இன்று பகல் 12.30 முதல் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது என்றும், மாலையில் தங்க அங்கி மரக்கூட்டம் வந்த பின்னரே, பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.