அடுத்த சீசனுக்குள் நிலக்கல்-பம்பை நான்கு வழிப்பாதை: தேவசம்போர்டு வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2015 12:12
சபரிமலை: அடுத்த சீசனுக்குள் நிலக்கல்-பம்பை ரோட்டை நான்கு வழி பாதையாக மாற்ற வேண்டும் என்று கேரள மாநில அரசை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு சார்பில் உறுப்பினர் அஜய், கேரள முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஆண்டு தோறும் 40 லட்சம் வாகனங்கள் பம்பை வந்து செல்கின்றன. இது 80 லட்சம் தடவை பயணிக்கிறது. பக்தர்கள் கூடுதலாக வரும் நேரத்தில் நிலக்கல் - முதல் பம்பை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்காக நிலக்கல்லில் வாகனங்களை தடுக்கும் போது, நீண்ட துாரம் பயணம் செய்து களைப்பில் வரும் பக்தர்கள் மேலும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதனால் அடுத்த சீசனுக்குள் நிலக்கல்- பம்பை ரோட்டை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும். இங்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து பார்க்கும் போது இந்த ரோட்டை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான காலம் கடந்து விட்டது. கேரளாவில் பெரும்பாலான ரோடுகள் காடுகளை வெட்டிதான் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் வனத்துறையை காரணம் காட்டி இந்த பணியை காலம் தாழ்த்த கூடாது, என அந்த கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளது.