பதிவு செய்த நாள்
02
ஜன
2016
03:01
புதுச்சேரி: புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு
பிரார்த்தனை நடந்தது. அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தன.
மணக்குளவிநாயகர் கோவில் மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு
நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்க கவசம்
அணிவிக்கப்பட்டது. பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் திரண்டு இருந்ததால் கோவிலில் இருந்து செஞ்சி சாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சீரடிசாயிபாபா: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவிலில் காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் கொடியேற்றத்துடன் துவங்கின. சிறப்பு அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12 மணிக்கு ஆரத்தி எடுத்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
சிறப்பு பூஜை: சின்னசுப்ராயபிள்ளை விதியில் உள்ள அங்காளம்மன் கோவில், கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், பாரதிபூங்காவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில், மொரட்டாண்டி பிரதியங்கிரா கோவில், வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில், காலாப்பட்டு பாலமுருகன் கோவில், முத்தியால்பேட்டை ஹயக்கீரிவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்ததால் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அலைமோதிய கூட்டம்: புத்தாண்டையொட்டி, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஆரோவில் பீச், சுண்ணாம்பாறு படகு குழாம் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. உல்லாசமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புத்தாண்டையொட்டி மக்கள் கூடும் இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.