மன்னர் குடும்ப உறுப்பினர் மரணம்பந்தளம் கோயில் 12 நாள் மூடல் திருவாபரண பவனியை நடத்த முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2016 12:01
சபரிமலை, : மன்னர் குடும்ப உறுப்பினர் இறந்ததை தொடர்ந்து பந்தளம் சாஸ்தா கோயில் 12 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. எனினும் 13-ம் தேதி திருவாபரண பவனியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பனை எடுத்து வளர்த்தது பந்தளம் மன்னர். ஐயப்பன் சபரிமலையில் குடி கொண்ட பின், ஐயப்பனை காண வந்த பந்தளம் மன்னர் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆபரணங்களுடன் வந்ததை நினைவு கூரும் வகையில், மகரவிளக்குக்கு ஒரு நாள் முன்னதாக திருவாபரணபவனி பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த பவனியுடன் பந்தளம் மன்னர் பிரதிநிதி ஒருவரும் பல்லக்கில் துாக்கி வரப்படுவார். பந்தளம் அரண்மனையில் மன்னர் குடும்ப வாரிசுகள் வசித்து வருகின்றனர். அரண்மனையை ஒட்டி இந்த குடும்பத்தின் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கிருந்துதான் திருவாபரண பவனி புறப்படும். வரும் 13-ம் தேதி இந்த பவனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் மன்னர் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் ராமவர்மராஜா 83, உடல்நலக்குறைவால் காலமானார். இதை தொடர்ந்து பந்தளம் சாஸ்தா கோயில் 12 நாட்களுக்கு மூடப்பட்டு விட்டது. இந்த நாட்களில் திருவாபரண தரிசனமும் கிடையாது. இனி ஜன.,19-ம் தேதி திறக்கப்படும். எனினும் வரும் 13-ம் தேதி திருவாபரண பவனி வழக்கம் போல் புறப்படும் என்று அரண்மனை நிர்வாகமும், தேவசம்போர்டும் அறிவித்துள்ளது. இதன் படி பந்தளம் கோயில் அருகில் உள்ள புத்தன் மேடை கொட்டாரத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது.