மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ஜன., 24ல் நடக்கிறது. ஜன., 12 முதல் 24 வரை நடக்கும் இவ்விழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சித்திரை வீதிகளில் இருவேளை வீதி உலா வருவர். ஜன., 24ல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலை அம்மனும், சுவாமியும் கோயிலிருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் செல்கின்றனர். காலையில் தெப்பத்தில் எழுந்தருளி இருமுறையும், இரவு ஒரு முறையும் சுற்றி வருவர். வாணவேடிக்கைகளும் நடக்கும். அன்று மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். கிழக்கு ராஜகோபுரம் வழியாக காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.