பதிவு செய்த நாள்
12
ஜன
2016
10:01
புதுடில்லி: கோவில்களுக்கு பெண்கள் செல்ல அரசியல் சட்டம் அனுமதி அளித்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல, ஏன் அனுமதிக்கக் கூடாது என, கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு, சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடக்கும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு வழிபாட்டை காண்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அய்யப்பன், பிரம்மச்சரிய கோலத்தில், குத்துக்காலிட்டு, யோக நிலையில், சின் முத்திரையுடன், பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதனால், பெண் பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
யாருக்கு அனுமதி?: பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 11 - 49 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. நீண்ட காலமாகவே, இது குறித்து சர்ச்சை கருத்துக்கள் எழுந்து வருகின்றன. பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள், சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்நிலையில், இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் இடம் பெற்ற அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள மாநில அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் வாதிட்டதாவது:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புனித பயணம் செல்வதற்கு, பக்தர்கள், 41 நாள் விரதத்தை கடைபிடிக்கின்றனர்.இந்த நாட்களில், பெண்களு க்கே உரிய உடல் ரீதியான பிரச்னை ஏற்படும் என்பதால், அவர்களை கோவிலுக்கு அனுமதிக்கும் வழக்கம் நடைமுறையில் இல்லை. இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோவில்களுக்கு பெண்கள் செல்ல, நம் நாட்டு அரசியல் சட்டம் அனுமதி அளித்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில், சபரிமலைக்கு பெண் பக்தர்களை அனுமதிக்க முடியாது என, கூற முடியாது. இது, பொதுவான கோவில். அனைத்து தரப்பினருமே, கோவிலுக்கு செல்வதற்கு உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கு, மத ரீதியிலான கட்டுப்பாடுகள் விதிக்கலாமே தவிர, பொதுவான கட்டுப்பாடுகளைவிதிக்க முடியாது. கடந்த, 1,500 ஆண்டுகளாக, இந்த கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பதில்லை என்ற நடைமுறை பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. அது, உண்மையா என, மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தை கையாளும் திருவாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலைக்கு பெண் பக்தர்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக, அடுத்த மாதம், 8ல், மீண்டும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சர்ச்சை: திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரையர் கோபால கிருஷ்ணனிடம், சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என, சமீபத்தில், கேட்கப்பட்டது. அதற்கு அவர், மனிதர்களிடம் ஆயுதங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய, கருவிகள் உள்ளன. அதேபோல், பெண்களுக்கு உள்ள பிரச்னைகளை கண்டறிவதற்கான கருவிகள் வந்த பின், சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என, கூறியிருந்தார். இதற்கு ஏராளமான பெண்கள் அமைப்புகள், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதேபோல், 2006ல், கன்னட நடிகை ஜெயமாலா, சபரிமலை அய்யப்பன் கோவில் விக்ரகத்தை தொட்டதாக சர்ச்சை எழுந்தது. அரசியல் சட்டம் பெண்களுக்கு அளிக்கும் உரிமையின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட், நோட்டீசை அனுப்பலாம். சமூகத்தில் ஒரு விவாதம், அதனால் உருவாகலாம். மத நிறுவனங்களுக்கு உள்ள அதிகாரத்தின் படியே, கோவில்களில் அர்ச்சகரை நியமிக்க முடியும் என்ற போது, அவற்றுக்கு எதிராக உத்தரவிட முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அஜிதா, மூத்த வழக்கறிஞர்: ஒவ்வொரு மதத்துக்கும், ஒரு நம்பிக்கை உள்ளது. முன்னோர், சில காரணங்களுக்காக, சில கட்டுப்பாடுகளைகோவில்களில் உருவாக்கி உள்ளனர். அவற்றுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். பெண் உரிமை என்பது சபரிமலைக்கு செல்வதில் இல்லை. அவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய பல தளங்கள் இருக்கின்றன.
தமிழிசை, தலைவர், தமிழக பா.ஜ.,: தேவபிரஸ்ன முடிவுப்படி வயது பெண்களுக்கு தடை : தேவபிரஸ்னம் நடத்திய போது, கூறப்பட்ட முடிவின் அடிப்படையில் தான், சபரிமலையில், 11 - 49வயது பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், கோவில் ஆச்சாரங்களை கோர்ட்டுக்கு தெரிவிப்பேன், என, சபரிமலையின் மூத்த தந்திரிகளில் ஒருவரான கண்டரரு ராஜீவரரு கூறினார். அவர் கூறியதாவது: தேவபிரஸ்னம் நடத்தி அதில் கூறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான், 10 முதல், 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆச்சாரங்களின் அடிப்படையில் மட்டுமே பேச முடியும். ஆச்சாரம் என்பது காலத்துக்கு ஏற்ப மாற்றக்கூடியதல்ல. கோர்ட் தீர்ப்பு என்னவாகும் என, கூற முடியாது. சபரிமலை கோவில் ஆச்சாரம் பற்றிய முழு விவரங்களையும் கோர்ட்டுக்கு தெரிவிப்பேன். சபரிமலையை பொறுத்தவரை, எந்த மதத்தைச் சேர்ந்தவரும் வரலாம். கணவன் சபரிமலைக்கு வரும் போது, கணவனை விட மனைவி தான் அதிக விரதம் மேற்கொள்கிறார். இதெல்லாம் நம்பிக்கை அடிப்படையிலானது. ஆச்சாரங்களை பாதுகாக்க, அரசியல் சட்ட ரீதியான அமைப்புகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலை ஆச்சாரத்தை நிலை நிறுத்த நடவடிக்கை: சபரிமலைக்கு, 11 - 49 வயது பெண்களை அனுமதிக்க வேண்டாம் என்பது, நம்பிக்கை அடிப்படையிலானது. இந்த விஷயத்தில், தேவசம் போர்டு சார்பில், மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதிடுவோம், என, தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மதமும், நம்பிக்கையும் யூகத்தின் அடிப்படையில் ஆனதல்ல. கலாசாரமும், ஆசாரங்களும் நம்பிக்கையின் அடிப்படையிலானவை. சபரிமலையில் உள்ளது பிரம்மச்சரிய பிரதிஷ்டை. பெண்களை இங்கு முழுமையாக தடை செய்யவில்லை. பத்து வயது-க்கு குறைந்த, 50-க்கு அதிக வயதுடைய பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது, சபரிமலையின் ஆச்சாரம். இதை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பக்தனின் கடமை. அந்த கடமையை நிறைவேற்ற தேவசம் போர்டு நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில், தேவசம் போர்டின் சார்பில், மூத்த வழக்கறிஞரை நியமித்து, சுப்ரீம் கோர்ட்டில் வாதிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.