பதிவு செய்த நாள்
18
ஜன
2016
02:01
திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் ஸ்ரீநமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியில் காலை நமசிவாயமூர்த்திகள் தோத்திர பாராயணமும், ஆன்மார்த்த மூர்த்தி ஞானமா நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும், குருமுதல்வர் நமசிவாயமூர்த்திக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து புனிதகடம் புறப்பாடும், மகாஅபிஷேகமும் மங்கள இசை முழங்க நமசிவாய மந்திரத்துடன் நடந்தது.
பின்னர் குருபூஜை விழா மலராக சிவன்கோயில்களில் வழிபடுவது எப்படி? எனும் நூலை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட அதனை சூரியனார்கோயில் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் பெற்றுக் கொண்டார். தினமலர் சிறப்பு மலரை வெளியிட அதனை செங்கோல் ஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் பெற்றுக் கொண்டார். பின்னர் திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீனம் ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
குடியாத்தம் சந்திரசேகர சிவாச்சாரியாருக்கு சிவாகமக் கலாநிதி, வைத்தீஸ்வரன்கோயில் முருகன் ஓதுவாருக்கு தெய்வத் தமிழிசைச் செல்வர், இசைக்கலைஞர்கள் சென்னை சுசித்ராவுக்கு சங்கீத வித்யாநிதி, சீர்காழி ரமேஷ்க்கு நாதஸ்வர கலைமணி, தமிழறிஞர் ஈரோடு வெங்கடாசலத்திற்கு சிவநெறித் திருத்தொண்டர் மாமணி, கல்வி பணிக்கு குத்தாலம் ராஜ் வித்யாலயா நிறுவனர் பாண்டியனுக்கு கல்வி சேவா ரத்தினம், சுவாமிமலை மோகன்ராஜ் ஸ்தபதிக்கு சிற்பக் கலை வித்தகர் எனும் விருதுகளும், தலா பொற்கிழி ரூ. 5 ஆயிரமும் ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் வழங்கினார். தொடர்ந்து மாகேஸ்வர பூஜையும், ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், சென்னை சுசித்ரா குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. இதில் ஆதீன தம்பிரான் சுவாமிகள், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம் பிரதிநிதிகள், சிவகங்கை சமஸ்தானம் இளங்கோ, சைவ சித்தாந்த பேராசிரியர்கள், ஆதீனப்புலவர்கள், கோயில் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.