கிள்ளை: கிள்ளை அருகே சி.முட்லுார் கன்னித் திருவிழாவில் சுற்றுப்பகுதியினர் சுவாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து வழிபட்டனர். திருமணமாகாத ஆண்கள், பெண்கள் காணும் பொங்கல் முதல் 10ம் நாள் கன்னித் திருவிழா கொண்டாடி சுவாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து வழிபாடு நடத்தினால் வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் கடந்த 150 ஆண்டுகளாக சி.முட்லுாரில் கன்னித்திருவிழா வெகு விமர்சையாக தை மாதத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான விழா சி.முட்லுார் ஊராட்சியில் உள்ள 15 கிராமங்களில் திருவிழா வெகு விமர்சியாக நடந்தது. நேற்று முன்தினம் இரவு விழா துவங்கியது. நேற்று காலை களிமண்ணினால் வடிவமைக்கப்பட்ட கன்னி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வீதிகள் தோறும் சென்று திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள் ஊர்வலமாக கோலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கும்மியடித்தபடி எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்தனர். கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.