பதிவு செய்த நாள்
30
ஜன
2016
01:01
சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை, அப்புசெட்டி தெருவில் தேரடி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று காலை, 6 மணிக்கு முகூர்த்தக் கால் நடுதல் விழா நடந்தது. மகா கணபதி ஹோமத்துடன், பக்தர்கள் புடைசூழ முகூர்த்தக்கால் நடப்பட்டது. வருகிற பிப்.,5ம் தேதி மாலை, 6 மணிக்கு அம்மனுக்கு பூச்சாட்டுதல், 8ம் தேதி பால்குடம், தீர்த்தக்குடம், பூஜை கூடை வருதல் நிகழ்ச்சியும், 19ம் தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, மார்ச், 7ல், கல்யாண வைபவம், இரவு, 8 மணிக்கு சக்தி அழைத்தல், கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள், 8ம் தேதி, அதிகாலை, 2 மணிக்கு பம்பை, தாரை, தப்பட்டை முழங்க, முகவெட்டு கப்பறை புறப்பாடும், காலை, 6 மணிக்கு கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடும் நடக்கிறது. பகல், 12 மணிக்கு, அம்மனுக்கு பச்சைப்போடுதல், மயான சூறையாடல் நடக்கிறது. 11ம் தேதி கும்ப பூஜை, 13ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன், காலை, 10 மணிக்கு மேல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து, காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மார்ச், 7ல், மகா சிவராத்திரி விழா, 8ம் தேதி மயான கொள்ளை, 11ல் 108 சங்காபிஷேகம், 17ல் அன்னாபிஷேகம், 18ல் சத்தாபரணம், 19ல், ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.