பதிவு செய்த நாள்
09
பிப்
2016
12:02
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமகத்திற்காக, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், தனியார் ஏஜன்ட்கள், புக்கிங்கை தொடங்கி, 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ய தொடங்கி விட்டனர். கும்பகோணத்தில் வரும், 13ம் தேதி முதல், 22ம் தேதி வரை, மகாமக பெருவிழா நடைபெற உள்ளது. கும்பகோணத்தை சுற்றியுள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில், அனைத்து அறைகளும், புக்கிங் ஆகிவிட்டன.இந்நிலையில், எங்கு தங்குவது என்ற குழப்பத்தில் சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இருக்கும் பக்தர்கள் தவிக்கின்றனர். இதையடுத்து, தீர்த்தவாரியில் குளிப்பது முதல் உணவு போன்ற பல்வேறு வசதிகளுடன், அழைத்து சென்று, திரும்ப அழைத்து வருவோம் எனக் கூறி, சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் தனியார் ஏஜன்ட்கள், நபர், ஒருவருக்கு, 5 ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், மகாமகத்திற்காக எங்கள் பகுதிகளில் இதுவரை, 10க்கும் மேற்பட்டவர்கள், தனியார் ஏஜன்சியிடம், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து புக்கிங் செய்துள்ளோம். இதில், குளத்தில் குளிப்பது, தங்குவது, கோயில்களை சுற்றி காட்டுவதாக தெரிவித்துள்ளனர், என்றார். போலீஸ் தரப்பில் கூறுகையில், இதில் சில மோசடி வேலையாகவும் இருக்கலாம். அத்துடன் இங்கு தங்குவதற்கு பள்ளிகள், திருமண மண்டங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே, இதுபோன்ற ஏஜன்ட்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றனர். 83 போலீஸ் மையங்கள்மகாமகத்தை முன்னிட்டு, 25 எஸ்.பி.,க்கள் தலைமையில், 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கும்பகோணம் நகரம் முழுவதும், 213 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.முக்கியமான 83 இடங்களில், போலீஸ் உதவி மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 36 தற்காலிக போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 ஸ்டேஷன்களுக்கு, ஒரு டி.எஸ்.பி., வீதம், 36 ஸ்டேஷன்களுக்கு, மூன்று டி.எஸ்.பி.,க்கள், 36 இன்ஸ்பெக்டர்கள், 36 எஸ்.ஐ.,க்கள், 36 ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார், 36 எழுத்தர்கள் மற்றும், 324 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.