மகாசக்தி செல்லியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2011 11:08
திருவள்ளூர் : திருப்பாசூர் மகாசக்தி செல்லியம்மன் புற்று கோவிலில், 108 பால் குட அபிஷேகமும், 108 திருவிளக்கு பூஜையும் கோலாகலமாக நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாசூர் கிராமத்தில் உள்ளது மகாசக்தி செல்லியம்மன் புற்று கோவில். இக்கோவிலில் ஆடி மாத நிறைவையொட்டி நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு, 108 பால் குடங்கள் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அங்கு தொடர்ந்து அம்மனுக்கு பால் குட அபிஷேகம் நடந்தது. காலை 11 மணிக்கு, 108 சங்காபிஷேகமும் நடந்தது. பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள், குங்கும அர்ச்சனை செய்து செல்லியம்மனை தரிசித்து சென்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமையில் விழாக் குழுவினர் செய்தனர்.