கோவை:ராம நாமத்துக்கு, ஈடு இணை எதுவும் கிடையாது, என, கோவையில் நடந்த புரந்தரதாசர் ஆராதனை விழாவில், உடையாளூர் பிரம்மஸ்ரீ கல்யாணராமன் பேசினார். பி.என். ராகவேந்திர ராவ் நினைவு அறக்கட்டளை சார்பில் புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கில் நடந்தது. நிறைவு நாளான நேற்று, புரந்தரதாசர் நாமசங்கீர்த்தனம் எனும் தலைப்பில் உடையாளூர் பிரம்மஸ்ரீ கல்யாணராமன் மற்றும் குழுவினரின் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடந்தது.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விட்டல் முன்னிலையில், புரந்தரதாசரின் கீர்த்தனைகள் அடங்கிய பாடல்களும், இசைக் கச்சேரியும் இடம்பெற்றது.முன்னதாக, உடையாளூர் பிரம்மஸ்ரீ கல்யாணராமன் பேசுகையில், ராம நாமத்துக்கு கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும்; கிருஷ்ணா நாமத்துக்கு யமுனா நதியில் குளித்த பலன் கிடைக்கும்; கோவிந்தா நாமத்துக்கு சரஸ்வதி நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்கிறார் புரந்தரதாசர். ராம நாமத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. புரந்தரதாசர் நான்கு லட்சத்து, 75 ஆயிரம் பாடல்கள் இயற்றியுள்ளார். அவரது கீர்த்தனைகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும், என்றார்.