பதிவு செய்த நாள்
15
பிப்
2016
11:02
திருவண்ணாமலை: செய்யாற்றில், அண்ணாமலையார் ரத சப்தமி தீர்த்தவாரி, இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கடந்த, 8ம் தேதி நடந்த தீர்த்தவாரியில், கூட்ட நெரிசலில் சிக்கி, நான்கு பேர் பலியாகினர். இதற்கு பரிகார பூஜை செய்யப்பட்டு, இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன், கலசப்பாக்கம் அருகே செய்யாற்றில் ரத சப்தமி தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில், 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை திருவண்ணாமலையில் இருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் புறப்பட்டு, கலசப்பாக்கம் கிராமத்துக்கு சென்றார். வழி நெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர். வழியில், தனகோட்டிபுரம் கிராமத்தில் அண்ணாமலையாருக்கு சொந்தமான நிலத்தை சுற்றிப் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து, கலசப்பாக்கம் சென்றடைந்த போது, அந்த கிராமத்தில் உள்ள திரிபுர சுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ஒன்றாக செய்யாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. பின், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அசம்பாவிதங்களைத் தடுக்க, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த ரங்கா ராட்டினம் போன்ற நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவாமியை சுற்றி, 50 மீட்டர் தொலைவுக்கு சுற்றி கம்பி வேலி அமைத்து, நெரிசல் ஏற்படாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செய்யாற்றில் நீர் இல்லாததால் ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி, தண்ணீர் தேக்கி தீர்த்தவாரி நடந்தது. வழக்கமாக தீர்த்தவாரியில் பங்கேற்கும் கோவில் யானை ருக்கு, புத்துணர்வு முகாமுக்கு சென்றுள்ளதால் இந்தாண்டு இதில் பங்கேற்கவில்லை.