மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மகா சிவராத்திரி முகூர்த்தக்கால் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2016 02:02
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.தேவதானப்பட்டி மஞ்சளாறு நதிக்கரையில் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானம் என்னும் குச்சுவீட்டின் கதவு திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. இரவு, பகல் அணையாத நெய்விளக்கு எரிகிறது. இக்கோயில் உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடைபெறும் சாயரட்சை பூஜையில் சயன உத்தரவு கேட்பது சிறப்பாகும். மிகவும் சிறப்பு பெற்ற இக்கோயில் ஆண்டு தோறும் மகாசிவராத்திரி அன்று திருவிழா துவங்கி தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும்.
விழாக்காலங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். நடப்பு ஆண்டு மார்ச் 7 ல் திருவிழா துவங்கி மார்ச் 11 ல் முடிகிறது. இதற்காக நேற்று காலையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காமாட்சி அம்மனின் பக்தையான ஸ்ரீகாமக் காலுக்கு சிரார்த்தம் செய்யப்பட்டது.அதன் பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. செயல அலுவலர் ராஜா, பரம்பரை நிர்வாக அறங்காவலர் கனகராஜ்பாண்டியன், பரம்பறை அறங்காவலர் தனராஜ் பாண்டியன் ஆகியோர் விழாவிற்கானஏற்பாட்டை செய்திருந்தனர்.