பதிவு செய்த நாள்
16
பிப்
2016
12:02
ஆயலுார்: திருவள்ளூர் அருகே, 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை, புனரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்துள்ள, ஆயலுார் ஊராட்சியில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, 500 ஆண்டுகள் பழமையான, சொர்ணாம்பிகை சமேத நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 50 ஆண்டு களாக பராமரிக்காததால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கோவிலின் உள்ளே இருந்த சொர்ணாம்பிகை சமேத நீலகண்டேஸ்வரர், பாலமுருகன் உள்ளிட்ட எட்டு சுவாமி சிலைகளை, பகுதி வாசிகள் அகற்றி, கோவிலின் முன்புற கதவு அருகே பத்திரப்படுத்தி உள்ளனர். இதனால், 10 ஆண்டுகளாக, இக்கோவிலில் பூஜைகள் நடைபெறுவதில்லை. எனவே, இந்த கோவிலை புதுப்பிக்க, இந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அறநிலையத் துறை செயல் அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘ஆயலுார் நீலகண்டேஸ்வரர் கோவிலை, தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்தி, உபய தாரர்களால் வழங்கப்பட்ட திட்ட மதிப்பீட்டுடன் அரசுக்கு அறிக்கை அனுப்பிஉள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்படும்,’’ என்றார்.