பதிவு செய்த நாள்
18
பிப்
2016
12:02
புன்செய் புளியம்பட்டி: கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட, 600 ஆண்டு பழமைவாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேணுகோபால சுவாமிகள், பாமா ருக்மணி, ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் விஜயதசமி, அம்புசேர்வை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தற்போது, கோவிலின் கோபுரத்தின் தெற்கு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. மண்டபத்தின் மேல் தளத்தில், செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. சுவாமி ஊர்வலம் வரும் வெளி பிரகாரம் பகுதியில், கற்கள் தாறுமாறாக பெயர்ந்து, பக்தர்கள் கால்களை பதம் பார்க்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக, கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை. குடிநீர் வினியோகமும் இல்லை. கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி குப்பை கொட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள் கோவில் வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் போதிய விளக்குகள் இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து, கோவிலை புதுப்பிக்க, இந்து சமய அறநிலைதுறையினர் நடவடிக்கை வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறநிலைத்துறை செயல் அலுவலர் அமுதசுரபி கூறுகையில்,கரிவரதராஜ பெருமாள் கோவிலை, தொல்லியல் துறை மூலம் புதுப்பிக்க, திட்ட மதிப்பீட்டுடன் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்படும்,என்றார்.