திருக்கோஷ்டியூர் மாசித்தெப்பம்: போக்குவரத்து குளறுபடியால் அவதி..பக்தர்கள் பல கி.மீ., நடை பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2016 11:02
திருப்புத்தூர்,:திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவத்திற்கு பக்தர்கள் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியதால் பல கி.மீ.,பக்தர்கள் நடந்து சென்று தெப்பத்தைத் தரிசித்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவத்தில் விரிவான திட்டமிடல் இல்லாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.மகாமகம் ஆண்டு என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள்,வாகனங்கள் வருகை இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது.தற்போதைய கணக்கெடுப்பில் சுமார் 1.75 லட்சம் பக்தர்கள் வருகை இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வழக்கம் போல் பெயரளவில் திட்டமிடல் நடந்தது.பக்தர்கள் பெருமளவில் அவதிக்குள்ளாயினர். சாலை விரிவாக்கத்தால் இருந்த சில மரங்களும் வெட்டப்பட்டதால் வெயிலுக்கு ஒதுங்க நிழல் இல்லாமல் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாயினர்.
சிலர் மயக்கமடைந்தனர். போக்குவரத்து நெருக்கடியும் பக்தர்களை திணற வைத்தது. தீபம் ஏற்ற இடம் இல்லாமல் பெண்கள் தவித்தனர். திருக்கோஷ்டியூருக்கு சிவகங்கை,பட்டமங்கலம், மதுரை,திருப்புத்தூர் ஆகிய நான்கு வழிகளில் சாலை வசதி,கூடுதலாக தேசிய நெடுஞ்சாலையில் இரு வழிச்சாலை இருந்தும் போலீசார் சரியான திட்டமிடல் இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி நீடித்தது. அதிகமாக வாகனங்கள் வருகை தரும் திருப்புத்தூர் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் ரோட்டில் பல மணி நேரம் நின்றது. சுமார் 4 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நடந்தே தெப்பத் திருவிழாவிற்கு சென்றனர். போதிய போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் நல்ல சாலை வசதி இருந்தும் போக்குவரத்து குளறுபடி காணப்பட்டது. தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மற்றும் தனியார் வாகனங்கள் பார்க்கிங் எதிர் எதிரே இருப்பதால் போக்குவரத்து குளறுபடி ஏற்படுவது குறித்து பல முறை வலியுறுத்தியும் அதில் கவனத்தில் கொள்ளாததால் அரசு பஸ் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. பக்தர்கள் எண்ணிக்கை கூடியதால் ரோடுகளில் கூட பெண்கள் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது.