பதிவு செய்த நாள்
25
பிப்
2016
12:02
திருவாரூர்: சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட, கடலுாரைச் சேர்ந்த நபரை, நேற்று, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து,20 கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன. திருவாரூர் மாவட்டம்,பேரளம் அருகே, கமுகக்குடி கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில்,கடந்த சில மாதங்களுக்கு முன், சாமி கற்சிலை திருட்டு போனது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். கோவில்களில் சாமி சிலைகள் திருட்டு போவதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த,10ம்தேதி, பேரளம் அருகே, கொல்லுமாங்குடியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற ஏழுபேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில்,இவர்கள், சாமி சிலைகள் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என, தெரியவந்தது.தொடர் விசாரணையில், இவர்கள்,கடலுாரைச் சேர்ந்த, மெய்யப்பன்,51,சக்திவேல்,45,ராகுல்,23, சின்னதம்பி, 22; காரைக்காலைச் சேர்ந்த ஆனந்தராஜ்,36,ரெமோ,35; நாகை மாவட்டம்,சங்கரன்பந்தலைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி 37, என்பது தெரியவந்தது. இவர்கள், திருவாரூர் மாவட்டம், பூசலாங்குடி, பண்ணைவிளாகம், பெரும்பண்ணையூர், உதயவேதாந்தபுரம், வைப்பூர் உட்பட, பல கிராமங்களில், கோவில்களில் கற்சிலைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். சிலைகளை திருடி மாமல்லபுரத்தில் விற்று வருவதாகவும் தெரிவித்தனர்.போலீசார் ஏழுபேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட கடலுாரைச் சேர்ந்த சத்தியநாராயணன்,53, என்பவரை போலீசார் தேடிவந்தனர்.நேற்று,தனிப்படை போலீசார், சத்திய நாராயணனை,அவரது சொந்த ஊரான சிதம்பரம் அருகே, அருள்மொழித்தேவன் கிராமத்தில் கைது செய்தனர். கைது செய்தனர்.மேலும்,அவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த,20 கற்சிலைகளை பறிமுதல் செய்தனர்.