பொள்ளாச்சி : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், கோமாதா பூஜை நடந்தது. பொள்ளாச்சி பாலக்காடு சாலையிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், காலை 5.30 மணியளவில் விஸ்வரூப தரிசனத்துடன் விழா துவங்கியது. 6.00 மணியளவில், 16 வகையான திரவியங்களால், திருமஞ்சன அபிஷேகம், 7.00 மணியளவில், கோமாதா பூஜை நடந்தது; 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன; 8.00 மணியளவில் அலங்கார வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி யாதவ சேவா சங்கம் சார்பில், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், நிர்வாகி பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது; பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.