பதிவு செய்த நாள்
23
ஆக
2011
11:08
ஏரல் : சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் புகழ் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமையில் கொடை விழா நடக்கும். இந்த ஆண்டு கொடை விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் 28ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், இரவு 9 மணிக்கு வில்லிசை நடக்கிறது. 29ம் தேதி இரவு 8 மணிகு அம்மன் மாக்காப்பு தரிசனம் வில்லிசை நடக்கிறது. 30ம் தேதி கொடை விழா அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், கயிறுசுற்றி ஆடுதல் ஆகியவை நடக்கிறது. இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜையை தொடர்ந்து வாணவேடிக்கை, சிங்காரி மேளத்துடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி காலை 8 மணிக்கு உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், 12 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு நகைச்சுவை மற்றும் இன்னிசை கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.