வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த மார்ச் 12ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. மார்ச் 20ல் அம்மன் சாட்டுதலும், மார்ச் 22 முதல் 26 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணியளவில் நூறுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மங்கம்மாள்கேணி மைதானத்தில் நடந்தது. இதற்காக காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அக்கினிச்சட்டி,மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது. இன்று மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.