தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை வாலைகுருசாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. சாத்தான்குளம் அடுத்த கொம்மடிக்கோட்டையிலுள்ள பழமையான இந்த சிவன் கோயில், சித்தர்கள் வணங்கிய சிறப்பு பெற்றது. இதன் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை ஆக.,26 ல் துவங்கியது. நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலை 7.15 முதல் 7.45 மணிக்குள் விமான கலசத்திற்கும், ராஜகோபுரத்திற்கும் புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கும், பரிவாரமூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடந்தது. திருச்செந்தூர் குமார் பட்டர், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். செப்.,11 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடக்கின்றன. இதற்கான, கொடியேற்றப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.