பதிவு செய்த நாள்
02
செப்
2011
10:09
ஈரோடு: ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவிலில் செப்டம்பர் 8ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஈரோடு திருவேங்கடசுவாமி கோவில் வீதியில் மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடந்து வந்த வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட மராமத்துபணிகள் நிறைவடைந்தது. செப்டம்பர் 8ம் தேதி காலை 10.30க்கு, மகிமாலீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதில், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, கலெக்டர் காமராஜ், எஸ்.பி., ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், தோப்பு வெங்கடாசலம், கிட்டுசாமி உட்பட பலர் பங்கேற்கின்றனர். செப்., 4ல் காலை 9 மணி முதல் திருக்குட நன்னீராட்டு உறுதி செய்தல் நடக்கிறது. தொடர்ந்து 5ம் தேதி காலை 9 மணிக்கு நவகோள் வழிபாடும், திசை வழிபாடு, பலியிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியும், 6ம் தேதி புண்ணிய நீர் சேகரித்தல், புனித மண் எடுத்தல், திருக்குட முழுக்கு, 7ம் தேதி இரண்டாம் கால வேள்விகள், திருமுறை ஓதுதல், பேரொளி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. செப்டம்பர் 8ம் தேதி காலை 6 மணிக்கு, திருமுறை ஓதுதல், நிறை வேள்வி, திருக்குடங்கள் எழுந்தருளல், திருக்குட நன்னீராட்டு விழாவும், நடக்கிறது. மாலை 7 மணிக்கு திருக்கல்யாண வழிபாடும், மகிமாலீஸ்வரர் திருவீதி உலாவும் நடக்கிறது.