குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா 108 விநாயகர் சிலைகள் விஜர்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2011 11:09
திருநெல்வேலி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேவா பாரதி தொண்டு நிறுவன நல அமைப்பு சார்பில் 5அடி உயர சிலை உட்பட மொத்தம் 108 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. மேலப்பாளையம், குறிச்சி பிள்ளையார் கோயில் தெரு சந்தி விநாயகர் கோயிலில் சேவா பாரதி தொண்டு நிறுவன நல அமைப்பு சார்பில் கடந்த 31ம்தேதி இரவு 5அடி உயர விநாயகர் சிலை உட்பட மொத்தம் 108 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் 107 சிறிய சிலைகளை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று பூஜை செய்தனர். விநாயகர் சதுர்த்தியான நேற்று காலை சந்தி விநாயகர் மூலவருக்கும், பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 அடி உயர விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 3.30 மணிக்கு 5 அடி உயர விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது. இதில் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கிசென்று வீடுகளில் வழிபட்டவர்களும் சிலைகளை ஊர்வலத்தில் எடுத்து வந்தனர். மொத்தம் 108 விநாயகர் சிலைகளும் தாரை, தப்பட்டை முழங்க விஜர்சன ஊர்வலம் மேலப்பாளையம், குறிச்சி, குருநாதபுரம், நாகம்மாள்புரம் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றிருக்கு எடுத்து வரப்பட்டது. ஆற்றங்கரையில் 108 விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதனையடுத்து சேவா பாரதி கணேசன் தலைமையில் பக்தர்கள் 5 அடி உயர விநாயகர் சிலை உட்பட 108 சிலைகளையும் விஜர்சனம் செய்து வழிபட்டனர். விஜர்சன ஊர்வலத்தை முன்னிட்டு பாளை., இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.