பொன் அறச்சாலையம்மன் குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2016 12:05
மொடக்குறிச்சி: அரச்சலூர் பொன் அறச் சாலையம்மன் கோவில் குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். மொடக்குறிச்சி வட்டாரம், அரச்சலூரில் பொன் அறச்சாலையம்மன் எனும் பழங்கால கோவில் உள்ளது. அறச்சாலையம்மனுக்கு குண்டம் மற்றும் தேர்திருவிழா கடந்த, 19 ம்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அறச்சாலையம்மனுக்கு ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரம், கிராமசாந்தி பூஜை நடந்தது. கடந்த, 2ம் தேதி கொடுமுடி காவிரியில் பக்தர்கள் தீர்த்தம் எடுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது. தீ மிதிக்கும் பக்தர்களுக்கு குருக்கள் காப்பு கட்டினர். தொடர்ந்து ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் மயில் அலகு, பறவைக்காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, முதலில் காப்பு கட்டிய கோவில் பூசாரி வஜ்ரவேல் குண்டம் இறங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.