கொளுத்தும் கோடை வெயில் குளிர்பானம், இளநீர் விலைஉயர்வு - பக்தர்கள் பாதிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2016 12:05
பழநி: பழநிகோயிலுக்கு கோடைவிடுமுறையை முன்னிட்டு குவியும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமான பழநிகோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடைவிடுமுறையால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் அதிகளவில் குவியும் அடிவாரம் பூங்காரோடு, கிரிவீதி உட்பட பல இடங்களில் குடிநீர் வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதனால் பயணிகள் குடிநீருக்கு அலைய வேண்டியுள்ளது. தண்ணீர் பாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இலவச சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மேற்கூரைவசதி இல்லை. இதனால் கிரிவீதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இந்த மறைவை பயன்படுத்தி சுகாதாரக்கேடுகளும்நடக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தரமற்ற தண்ணீர் பாக்கெட், குளிர்பானங்களை அடக்கவிலையை காட்டிலும் ரூ.3 முதல் ரூ.5 வரை கூடுதலாக விற்கின்றனர். இளநீர் ஒன்றின் விலை ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெப்பத்தை தணிக்கும் பழங்கள், குளிர்பானங்கள், இளநீர் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. திடீர் விலை ஏற்றத்தால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் அடிவாரம் சன்னதிவீதி, அய்யம்புள்ளி, கிரிவீதிகளில் இலவச மோர்பந்தல், கூடுதல் குடிநீர் வசதிகளை நகராட்சி, கோயில் நிர்வாகத்தினர் செய்துதரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.