பதிவு செய்த நாள்
06
மே
2016
11:05
திருச்சி, :திருச்சி, ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா, கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். அதன் பின், தினமும் பல்வேறு வாகனங்களில், சுவாமி, உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கடந்த, 3ம் தேதி நம்பெருமாள் நெல் அளவை கண்டருளல் நிகழ்ச்சியும், 4ம் தேதி, வெள்ளி மற்றும் தங்க குதிரை வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார். நேற்று காலை 6:00 மணிக்கு, சித்திரை தேரோட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் உட்பட பலர் தேர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.