பதிவு செய்த நாள்
03
செப்
2011
11:09
திருநெல்வேலி:நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி தேர்த்திருவிழா துவங்கியது.திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி தேர்த்திருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். 12 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்புபூஜைகள், வீதியுலா நடக்கிறது. ஏழாம் திருநாளான 8ம்தேதி ஆறுமுகர் உருகுச்சட்டம், சண்முக விலாசம் கட்டளை, தண்டியல் பல்லக்கு, வெற்றிவேர் சப்பரத்தில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளல், சிறப்பு நீராட்டு வழிபாடு, இரவு தங்கச்சப்பரத்தில் சிவப்புசாத்தி நெல்லைக்கு எழுந்தருளல் நடக்கிறது. எட்டாம் திருநாள் காலை வெள்ளைசாத்தி, இரவு பச்சைசாத்தி, ஆறுமுகர் சேர்க்கை, ஒன்பதாம் திருநாள் காலை தண்டியல் பல்லக்கு நடக்கிறது. 10ம்திருநாளான செப்டம்பர் 11ம்தேதி காலை 6 மணிக்கு சுப்பிரமணியசுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். பின்னர் தேரோட்டம் நடக்கிறது. 12ம்தேதி பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி, இரவு வெள்ளிமயில் வீதியுலா நடக்கிறது.13ம்தேதி காலை 10.30 மணிக்கு சுவாமி நெல்லை டவுன் தெப்பக்குள மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.