ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி நாளில் சிறு குழந்தைகள் ஏராளமான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். விநாயகர் சதுர்த்தி நாளன்று அதிகாலையிலேயே சிறிய குழந்தைகள் அட்டை பெட்டிகளுக்குள் விநாயகர் சிலையை வைத்து இருபுறமும் இரண்டு கம்புகளை அமைத்து சிறிய சப்பரம் போல் உருவாக்கி விநாயகர் சிலைகளை வீடு வீடாக கொண்டு வந்தனர். ஒவ்வொரு தெருக்களிலும் சிறுவர் சிறுமியர்கள் ஏராளமான அளவில் சிறிய சிறிய சப்பரங்களை சுமந்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.சிறிய அட்டை பெட்டிக்குள் சிறிய பிளாஸ்டிக் விநாயகர், மண் விநாயகர் ஆகிய விநாயகர் சிலைகளை அழகாக அலங்காரம் செய்து வீடு வீடாக கொண்டு வந்து மணியடித்து தீபாராதனை காண்பித்தனர். பல தெருக்களுக்குள் ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட சிறு சிறு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.