பதிவு செய்த நாள்
23
மே
2016
11:05
கேசம்பள்ளி: கேசம்பள்ளி அருகே உள்ள ராகவய்யா குளத்தில் சோழர் காலத்தை சேர்ந்த, மூன்று பஞ்சலோக சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கே.ஜி.எப்., புறநகர் பகுதியில் உள்ள கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட ராகவய்யா குளத்தில், மழைநீர், கழிவுநீர் தேங்கியது. கோடை வெயிலின் தாக்கத்தால், இக்குளத்தின் தென் மேற்கு பகுதியில் நீர் வற்ற துவங்கியது. நீரின் அளவு குறைந்து வந்ததால், அப்பகுதியினர் அந்த நீரை குடங்களில் எடுத்து சென்று பயன்படுத்தினர். இந்நிலையில், குளத்தை அழகுபடுத்தவும், துார்வாரவும் கோலார் கலெக்டர் திரிலோக்சந்தர் உத்தரவின் பேரில், மழைநீர் சேகரிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. டேங்கர் லாரிகள் மூலம் குளத்தில் நீர் நிரப்பும்போது, குளத்தில் சிலை ஒன்று புதைந்து கிடந்ததை, டிரைவர் சீனிவாச ரெட்டி கண்டார். சிலரின் உதவியுடன், கலைநயம் மிக்க நரசிம்ம சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. மேலும், சிலைகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையில், குளம் முழுவதும் தேடும் பணி நடைபெற்றது. இதில், லட்சுமி, விஷ்ணு சிலைகளும் கிடைத்தன. ஒரு அடி உயரம் கொண்ட மூன்று சுவாமி சிலைகள் கிடைத்த தகவல், கிராமப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பேத்தமங்களா போலீசாரும் விசாரித்தனர். மூன்று சிலைகளும் பஞ்சலோக சிலைகள் என்றும், சோழர் காலத்துக்கு உட்பட்டவை என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த சிலைகளை பெரிய கோவில்களிலிருந்து யாரோ திருடி வந்து, ஏரியில் வீசியிருக்கலாம் என, அப்பகுதியைச் சேர்ந்த, 80 வயது முதியவர் ஒருவர் தெரிவித்தார்.