குருவாயூரில் கோவிலில் ஒரே நாளில் 219 திருமணங்கள் நடந்தன!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2011 11:09
குருவாயூர்: சுப முகூர்த்தம் மற்றும் விடுமுறை தினமான, நேற்று முன்தினம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 219 திருமணங்கள் நடந்தது. இதற்காக குவிந்திருந்தவர்கள் இடமின்றி பிளாட்பாரங்களில் படுத்துறங்கினர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவிலில் நிறைய திருமணங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் (4ம்தேதி) கோவிலின் கிழக்கு சன்னிதியில் திருமணங்கள் நடத்த 219 பேர் கோவிலில் பணம் செலுத்தி இருந்தனர். அன்றைய தினம் சுப முகூர்த்தம் மற்றும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவு திருமணங்கள் நடந்தன. இத்திருமணங்கள் அன்றைய தினம் அதிகாலை முதல் மதியம் வரை நீடித்தது. மணமக்களில் பலரும் மேடை மீது ஏறவே, பெரும்பாடுபட்டனர். இத்திருமணங்களில் கலந்துகொள்ள வந்திருந்த திரளான உறவினர்கள் மற்றும் நண்பர்களில் பலரும் தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காமல் தவித்தனர். அவர்களில் பலரும் பிளாட்பாரங்களில் படுத்துறங்கி, ஆங்காங்கே இருந்த கட்டண குளியலறைகளை பயன்படுத்தினர். கார் மற்றும் வாகனங்களில் வந்திருந்தவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றி தவித்தனர். விடுதிகள் நிரம்பி வழிந்ததால், பக்தர்கள் தங்குவதற்கு வழியின்றி தவித்தனர்.