பதிவு செய்த நாள்
06
செப்
2011
11:09
திருநெல்வேலி : மானூர் அம்பலவாணர் கோயிலில் கரூர் சித்தருக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் இன்று(6ம் தேதி) நடக்கிறது. கடும் தவத்தினால் கரூர் சித்தருக்கு எட்டு வகை சித்திகள் கிடைக்கின்றன. சித்திகள் பெற்ற கரூர் சித்தர் சிவ தல யாத்திரை மேற்கொள்கிறார். ஈசனை அழைத்த உடன் அவர் காட்சிகொடுக்க வேண்டும் என்ற சித்தியும் பெறுகிறார். நெல்லை வந்த கரூர் சித்தர் நெல்லையப்பரை அழைத்தார். கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமுற்ற கரூர் சித்தர்,""ஈசன் இங்கு இல்லை. எருக்கும்,குறுக்கும் இங்கு எழுக என்று சாபமிட்டு மானூர் நோக்கி நடந்தார். சுவாமி நெல்லையப்பர் சிவதொண்டராக வந்து கரூர் சித்தரை அழைத்தார். சற்றுகோபம் தணிந்த சித்தர், மானூர் வந்து காட்சி தந்து "சாபவிமோசனம் பெறலாம் என ஈசனிடம் கூறி நடந்தார். இதையடுத்து நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் மானூர் சென்று கரூர் சித்தருக்கு ஜோதிமயமாக காட்சி அளித்தனர். தொடர்ந்து கரூர் சித்தரை உடன் நெல்லைக்கு அழைத்து வருகிறார்கள். நெல்லை வந்ததும், ""இங்கு ஈசன் உளர். எருக்கும், குறுக்கும் அறுகஎன கூறி சுவாமிக்கு சாப விமோசனம் வழங்குகிறார். இந்நிகழ்வுகளை போற்றும் வகையில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருநாள் விழாவாக 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மூலத்திருநாள் விழா கொடியேற்றம் கடந்த 27ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த 4ம் தேதி இரவு 9 மணியளவில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து கரூர் சித்தர் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் வீதிஉலா வந்தார். பின்னர் சங்கரன்கோவில் ரோடு வழியாக ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோயிலுக்கு நேற்று காலை சென்றார். அங்கு கரூர் சித்தருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று நள்ளிரவு அதிகாலையில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து சந்திரசேகரர், பவாணி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலியகலிய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரதவீதிகளிலும் வீதிஉலா நடந்தது. பின்னர் ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூருக்கு சென்றனர். இன்று(6ம் தேதி) காலையில் மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் கரூர் சித்தருக்கு, சுவாமி நெல்லையப்பரும், அம்பாளும் காட்சி கொடுக்கும் சிறப்பு வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து ஆவணி மூலம் மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதையடுத்து கரூர் சித்தர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார். இங்கு நெல்லையப்பர் கோயிலில் "சாபவிமோசனம் நிவர்த்தி செய்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மானூர், ரஸ்தா உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.