பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
02:06
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கிணையான ஆறு கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது. மருத்து வாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக தோன்றிய சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி இங்கு தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அகோரமூர்த்தி, சிவனின் 64 உருங்களுள் 45வது உருவமாகவும், சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறார். கரிய திருமேனியை கொண்டவர். எட்டு கரங்களும், அவற்றில் வேதாளம், கத்தி, உடுக்கை, காபலாம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஏழு ஆயுதங்களுடன் வீரக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். மேலும் இவர் தீப்பிழம்பான எரிசிகை, நெருப்பினை கக்கும் நெற்றிக்கண், கோரை பற்களுடன், 14 பாம்புகளை தன்னுடைய திருமேனியில் அணிந்து கம்பிரமாக காட்சியளிக்கிறார். அகோரமூர்த்தி மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று அவதரித்தார். அதனை போற்றும் விதமாக இந்த கோயிலில் மாதம் தோறும் பூர நட்சத்திரத்தன்று அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத 2 வது பூர நட்சத்திரம் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவர் அகோரமூர்த்தி சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷகம் செய்யபட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து மஹாதீபாரதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை பாபு குருக்கள் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் முருகையன், 63 நாயன்மார்கள் வழிபாட்டு மன்றத்தினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அகோரமூர்த்தியை தரிசனம் செய்தனர்.