குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேக மண்டல பூஜை கோலாகலமாக நடந்தது. குமாரபாளையம் அருகே வளையக்காரனூர், காந்தி நகர் பகுதியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேக விழா, கடந்த, 15ம் தேதி தொடங்கியது. கடந்த, 16ம் தேதி, 2ம் கட்ட யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விநாயகர், மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜைக்கு கட்டளைதாரர்கள் சார்பில், தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.