பதிவு செய்த நாள்
23
ஜூன்
2016
10:06
கோத்தகிரி: கோத்தகிரி பாண்டியன்நகர், தாவக்கம்பை முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம், கொண்டாடப்பட்டது. கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சி, பாண்டியன்நகர், தாவக்கம்பை பகுதியில், நடந்துவந்த கோவில் கட்டும் பணி, நிறைவடைந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று, காலை, 8:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம் நேதிகார்ச்சனை, நாடி சந்தானம், திரவியாஹுதி, பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் கலசம் புறப்பாடு நிகழ்ச்சியை அடுத்து, காலை, 10:00 மணிக்கு, சிம்ம லக்கனத்தில், விமானம் மற்றும் விநாயகர், முருகர் மற்றும் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் சிவாச்சார்யார் குமார சுப்ரமணியன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பகல், 12:00 மணிக்கு, தசதரிசனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று,மண்டல பூஜை துவங்குகிறது.