பதிவு செய்த நாள்
27
ஜூன்
2016
12:06
திருத்தணி: அகூர், அருந்ததி காலனியில், நேற்று நடந்த, மாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்ட அருந்ததி காலனியில் மாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 20ம் தேதி, தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் தபசு ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, தீமிதி திருவிழாவை ஒட்டி, காலையில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணியளவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.