பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
12:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆக., 3ம் தேதி வாஸ்து சாந்தியுடன் ஆடி முளைக்கொட்டு உற்சவம் துவங்குகிறது.கோயில் இணை கமிஷனர் நா.நடராஜன் கூறியதாவது:’ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற கூற்றின்படி விவசாயிகள் ஆடியில் விதை விதைத்தும், நாற்று நட்டும் விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விவசாயிகள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். இதன்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடக்கும் விழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள விழாக்கள் நான்கு. அவை ஆடி முளைக்கொட்டு, ஐப்பசி கோலாட்டம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகும்.
ஆடி முளைக்கொட்டு உற்சவம் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு ஆக., 4 முதல் ஆக., 8ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும். அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆடி வீதியில் நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வார். நாதஸ்வரக் கலைஞர்கள் ’கொட்டு மேளம்’ சிறப்பு இன்னிசையை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்ப்பர். ஏழாம் நாள் விழாவாக ஆக.,10ம் தேதி இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. ஆக.,3ம் தேதி வாஸ்து சாந்தி துவங்கி ஆக.,14ம் தேதி மீனாட்சி அம்மன் சேத்தி சேரும் வரையிலும் கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அம்மனுக்கு தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் போன்ற சேவைகள் பதிவு செய்து நடத்திட இயலாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர், என்றார்.