பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
12:07
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் யாத்திரை சென்ற, 86,000 பக்தர்கள், பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்க தரிசனம் செய்ய, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டிற்கான யாத்திரை, ஜூலை 2ல் துவங்கியது; அடுத்த மாதம், 17ல் நிறைவடைகிறது. கடந்த ஒரு வாரத்தில், 86,000 பேர் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர். தினமும், 15,000 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், யாத்திரையின் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில், ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர், நேற்று மரணமடைந்தார். இந்த ஆண்டு யாத்திரையில், டில்லியை சேர்ந்த ஒரு பெண் உட்பட, இதுவரை, ஆறு பேர் மரணமடைந்துள்ளனர்.