ஏரல் : ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். ஏரல் மெயின் பஜார் அருகில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கொடை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்துவருதல், மதியம் மகா அபிஷேகம், தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், மாலையில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கும்பம் எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு புஷ்ப அலங்கார தீபாராதனை, 10.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் இருந்து ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கொடைவிழாவில் அம்மன் பொன்சப்பரத்தில் நகர் உலா புறப்பாடு நடந்தது. ஏரல் நகர் வீதி சென்ற நிகழ்ச்சியும், தொடர்ந்து வாணவேடிக்கையும் நடந்தது. அம்மன் நகர் உலா வருவதை முன்னிட்டு தெருக்கள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் சப்பரத்திற்கு தேங்காய் உடைத்து அம்மனை தரிசித்தனர். கொடை விழாவில் ஏரல் பகுதி பொதுமக்கள், பஜார்வியாபாரிகள், சென்னை வாழ் சங்கத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று காலை மற்றும் மதியம் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் இன்று இரவு 9 மணிக்கு ஏரல் ஒன்பது தெரு இந்துநாடார் உறவின் முறை சங்கம் முன்பு சென்னை வாழ் சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை இரவு வழக்காடு மன்றம், வரும் 17ம் தேதி இரவு பட்டிமன்றம், 18ம் தேதி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துவருகின்றனர்.