பதிவு செய்த நாள்
26
ஜூலை
2016
01:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவிலின் ஆடிக்குண்டம் விழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று மாலை, 5:00 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. 36 அடிநீளம், இரண்டு அடி அகலத்திற்கு குண்டம் அமைத்து, அதில் ஊஞ்ச விறகு அடுக்கி, பூஜை செய்து தீ மூட்டினர். தீ நன்கு எரிந்து கொண்டிருக்கும் போது, மழை பெய்ததால், இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் குண்டத்தில் விறகுகள் அடுக்கி எரித்தனர். நள்ளிரவு, 2:00 மணிக்கு விறகுகள் எரித்து முடித்து, பக்தர்கள் நடந்து செல்லும் வகையில், மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் குழுவினர், 30 பேர் குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று(ஜூலை 26) அதிகாலை, 3:00 மணிக்கு பொதுப்பணித்துறையின் அம்மன் அறக்கட்டளை சார்பில், பவானி ஆற்றிலிருந்து கோவிலுக்கு அம்மன் அழைத்து வரப்பட்டது. கத்தரி பூ கலர் பட்டுச்சேலை உடுத்தி, மலர் அலங்காரம் செய்து அழகிய ரதத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் பூசாரி பரமேஸ்வரன் காலை, 5:30 மணிக்கு குண்டத்தை சுற்றி வந்து, சிறப்பு பூஜை செய்தார். பிறகு, மல்லிகை பூ பந்து, எலுமிச்சை பழம் ஆகியவற்றை குண்டத்தில் உருட்டி விட்டு காலை, 5:45 மணிக்கு முதலில் இறங்கினார். அதைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், கோலக்கூடை, சக்தி கரகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், ஆண்கள், பெண்கள் குழந்தைகளை எடுத்துக் கொண்டும், திருநங்கைகள் என, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கட்டளைதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.