பதிவு செய்த நாள்
19
செப்
2011
11:09
சேந்தமங்கலம்: நைனாமலை பெருமாள் கோவிலில், புரட்டாசி உற்சவ பெருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை அருகே நைனாமலை உள்ளது. இங்கு, 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில், பல்லவர் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக, 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே, நின்ற நிலையில் வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும்.
மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான "அரிவாள் பாழியும் மற்றும் "அமையா தீர்த்தம் எனும் பெரிய பாழியும் உள்ளது, இக்கோவிலின் சிறப்பு. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரலற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாப்படுவது வழக்கம். அந்த மாதத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும், லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வர். அதில், மூன்றாவது வாரம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரிக்கும். இந்த ஆண்டு புரட்டாசி பெருவிழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8,15 ஆகிய ஐந்து வாரம், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஆண்டுதோறும், லட்சக்கணக்கில் பக்தர்கள் வரும் நைனாமலை உச்சிக்கு வாகனங்கள் சென்றுவர, அறநிலையத்துறை சார்பில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. அதில், மூன்று கொண்டை ஊசி வளைவு மற்றும் இரண்டு சாதாரண வளைவுகள் கொண்டு பாதை அமைக்கப்படுகிறது. மலையின் மேல், இரண்டு ஏக்கர் பரப்பில் பஸ் ஸ்டாண்ட் அமையவுள்ளது. அதற்கு, நிலத்தை சமன் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதற்காக, அறநிலையத்துறை, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள, 2.50 கோடி ரூபாய், பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு, மலையில் வழித்தடம் ஏற்படுத்தப்படுகிறது. அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் மண்டபத்தில் இருந்து துவங்கும் இச்சாலை, மலைக்கோவில் பக்கவாட்டில் சென்று முடியும். அங்கிருந்து, 150 படிக்கட்டுகள் மட்டும் கடந்தால், கோவிலுக்குச் சென்று விடலாம். அதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் எளிதாக செல்ல முடியும். இப்பணி அனைத்தும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிவடையும் பட்சத்தில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.