பதிவு செய்த நாள்
23
ஆக
2016
12:08
கோவை: மாச்சம்பாளையம் கிருஷ்ணர் சன்னதியில், ருக்மணி சத்யபாமா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. சுந்தராபுரம் அருகே, மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில், வேணுகோபால சுவாமிக்கு சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் மார்கழி, புரட்டாசி மாதங்களில், மாச்சம்பாளையம் சந்தான கோபாலகிருஷ்ணர் பஜனைக்குழுவின், பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. ஊர்பொதுமக்கள் மற்றும் பஜனைக்குழுவினர் முயற்சியில், ருக்மணி சத்யபாமா சிலை செய்யப்பட்டு, கோபாலகிருஷ்ணர் சன்னதியில் வைக்க முடிவு செய்யப்பட்டு, இரு நாட்களுக்கு முன் இதற்கான விழா துவங்கியது. சிறப்பு ஹோமங்கள், யாக பூஜைகளுக்குப்பின், ருக்மணி சத்யபாமா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம், யாக பூஜையை தொடர்ந்து, சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பஜனைக்குழுவினரின் பஜனை பாடல்கள், வேதபாராயணங்கள் இசைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது; ஏராளமானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மாலையில் நடந்த கருடசேவையில், பஜனைக்குழுவினரின் பாடல் இசைத்தபடி வந்தனர்.