பதிவு செய்த நாள்
30
ஆக
2016
11:08
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டு திருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
நாகை அடுத்த வேளாங்கண்ணியில், ‘கீழை நாடுகளின் லுார்து’ என்று அழைக்கப்படும், ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டு திருவிழா, ஆக., 29ம் தேதி துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா, நேற்று மாலை துவங்கியது. மாலை 6.௦௦ மணிக்கு, தேவாலய முகப்பில் இருந்து கொடி பவனி புறப்பட்டு, முக்கிய வீதிகளில் வலம் வந்து, இரவு 7.30 மணிக்கு தேவாலயத்தை அடைந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின், லட்சக்கணக்கான பக்தர்களின், ‘மரியே வாழ்க’ என்ற விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, தேவாலயம் மற்றும் விண்மீன் தேவாலயத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செப்., 7ம் தேதி இரவு 8.௦௦ மணிக்கு திருத்தேர் பவனி, மறுநாள் 8ம் தேதி மாதா பிறந்த நாள் விழா, விண்மீன் தேவாலயத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் தேவாலயத்தின் மேல், கீழ் ஆலயங்கள் மற்றும் விண்மீன் தேவாலயத்தில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, கொங்கனி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடக்கிறது. தேவாலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், நவநாள் ஜெபம் நடைபெறும்.